Thursday, February 15, 2007

நலம் புனைந்து உரைத்தல்

நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!



நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.

மொட்டுப் பூவாவதை
பார்க்க ஆசை.
மெதுவாக இமைகளைத் திற!



மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குன்றாய்!


மூங்கில் தோள்; மாந்தளிர் மேனி;
முத்துப் பல்; நறுமணம் வியர்வை ;கூர்வேல் கண்.
- இலக்கணப்படி உவமை.
காதல்படி உண்மை.



முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மையுண்ட கண்.


பூங்காப் பக்கம் செல்லாதே.
உன் கண்போல் பூக்கவில்லையேயென
பூக்களெல்லாம் கண்ணீர் விடுகின்றன.


காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.

குவளை மலர்கள் காணும் தன்மைப்பெற்றுக் கொண்டால், “இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்”

உன் கூந்தலேறிய மகிழ்ச்சியில்
அநிச்ச மலர் சிரிக்கிறது.
அதன் எடைதாங்காமல்
உன் மெல்லிடையோ அழுகிறது.


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

நட்சத்திரமெல்லாம் மின்னுகிறதா?
அடிப்போடி…
நிலவெது? உன் முகமெது? எனத் தெரியாமல்
மலங்க மலங்க விழிக்கிறது!


மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.


உன் முகம் நிலா என்கிறேன்.
கோபிக்கிறாய்.
சரி சரி பௌர்ணமிதான்!


அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!


உன் முகம்போல் ஒளியில்லாததால்
என்னிடமிருந்து தப்பித்தது…
நிலவு!



மாதர் முகம்போலொளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.


உன் போல ஒளிவீச
நிலவுக்கும் ஆசையாம்.
என்ன ரகசியமென சொல்லிக்கொடு.



மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி.

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

பூக்களும் மயிலிறகும் கூட
உன் பாதத்துக்கு வலிக்கிறதா?
இனி தென்றலில் நட!



அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவை மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.



3. புணர்ச்சி மகிழ்தல்

அழகு.இசை.சுவை.மணம்.ஸ்பரிசம்.
இப்படி நீ தரும் ஐம்புல
இன்பங்களுக்கும்
மேலாகத் தர என்னிடம் இருக்கிறது
காதல்!



கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டோடி கண்ணே யுள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

காதலில் விழவும் வைக்கிறாய்.
காதலோடு எழவும் வைக்கிறாய்.
நீ நோயா? மருந்தா?



பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

உன் தோள் சாய்ந்திருந்த தனிமைப் பொழுதில்
“இப்படியே சொர்க்கம் போய் விடலாமா?” என்கிறாய்.
இப்போது மட்டும் எங்கிருக்கிறோம்?



தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

விலகினால் சுடும்,
நெருங்கினால் குளிரும் ஒரு தீ…
இவள் ஒருத்தி தான்!


நீங்கிற் றெறூஉங் குறுகுங்ஆற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்.

நீங்கினால் சுடுகின்றது. அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?


ஒரு தேவதையென்னைக் காதலிப்பாளென
சிறுவயதில் நானும் நினைத்ததுண்டு!
இன்றோ என் தோள்சாய்ந்தபடி
என்னோடு நடக்கிறாய் என் காதலியாக…
இதுதான் நினைத்தது ‘நடப்பது’என்பதா?



வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோள்தாழ் கதுப்பினா டோள்.

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.


தழுவும்போதெல்லாம்
என்னுள் நழுவுகிறாய்.
தோல் போர்த்திய அமிழ்தை
தோள் என்று நம்ப சொல்கிறாயா?


உறுதோறு றுயிர் தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அணைத்துச் சேரும்போது,
“பகுத்துண்ணும் இன்பம் இதுவா?” என்றேன்.
இல்லையெனச் சொல்லி,
அணைத்துச் சேர்த்தாய் நம் உதடுகளை!


தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.

அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்து உண்டாற் போன்றது.

இறுக்கி அணைக்கிறாய்.
மூச்சு வாங்குகிறது…
இடையில் அகப்பட்ட காற்று!



வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும், தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்.


நமக்குள்ளான சண்டையில்
யார் முதலில் விட்டுக் கொடுப்பதென
ஆரம்பிக்கிறது அடுத்த சண்டை…


ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல். ஊடலை உணர்ந்து விடுதல். அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும்.


அணைத்துப் படித்தால்
எல்லாப் பக்கமும்
காதல் வழிகிற
கவிதைப் புத்தகம் நீ!


அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல். நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது.


அழியாத அன்புடன், Praba

No comments: