Saturday, February 17, 2007

+2 காதல்- 5

+2 காதல்- 5

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

மெல்ல எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னேன் : “இல்ல சாரதா எனக்கு பயமா இருக்கு..நாம வயசுக்கு மீறி யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கும் உன்னப் பிடிச்சிருக்குதான்…நான் இல்லனு சொல்லல…. ஆனா இந்த வயசுல இவள மாதிரி ஒரு wife வரணும்னு யோசிக்கலாமேத் தவிர இவளே எனக்கு wife-aa வரணும்னு முடிவெடுக்க தகுதியிருக்கான்னுத் தெரியல..இது இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு நடந்திருந்தா நானும் கண்டிப்பா சரின்னு சொல்லியிருப்பேன்..நமக்கெல்லாம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கவே இன்னும் எட்டு, பத்து வருஷத்துக்கு மேல இருக்கு..அதுக்குள்ள உனக்கும் என்ன வேணா நடக்கலாம்..எனக்கும் என்ன வேணா நடக்கலாம்..அதனால வேண்டாம் சாரதா..இதப் பத்தி இனிமேப் பேச வேண்டாம்” –

இதைத்தான் சொன்னேனா என்று தெரியாது, ஆனால் இதுமாதிரி தான் ஏதோ சொன்னேன்.

சொல்ல சொல்ல ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.அதற்கு மேல் அங்கிருந்தால் என்னை மாற்றிவிடுவாளோ என பயந்து,அவள் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டேன்.அன்று நான் தேர்வு எழுதாமலே வீடு வந்து சேர்ந்தேன்.அவளும் எழுதியிருக்க மாட்டாள் என்று தெரியும்.

அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தன. அவள் chemistry tuition வருவதை நிறுத்தி விட்டாள். அங்கு tuitionனே கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் அவள் physics tuitionனை விட்டும், maths tuitionனை விட்டும் நின்று விட எனக்குப் பயமாய் இருந்தது. நான் நடந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொல்ல ஒவ்வொருவனும் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டான்.

“டேய் நீ என்ன லூசாடா? இவ்வளவு நாளா அவளப் பத்தி எழுதி வச்சது, எங்களுக்குத் தெரியாம அவ பின்னாடி சுத்துனதெல்லாம் அப்புறம் எதுக்கு? பெரிய இவனாட்டம் டயலாக் பேசிட்டு வந்திருக்க? “ – வினோத்.

“அது ஒன்னும் இல்லடா..அந்தப் பொண்ணே வந்து propose பண்ணியிருக்கில்ல..அதான் ஐயாவுக்கு ஏறிப் போச்சு…இவன் சொல்லி அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லியிருந்தா அப்பப் புரிஞ்சிருக்கும்…” – செல்வா.

“ஏண்டா ஒன்னோட மொகரக் கட்டைக்கு அந்தப் பொண்ணு அதிகம்னு உனக்கேத் தெரியும்..அதுவே ஓக்கே சொல்லும்போது உனக்கென்னடா…மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பா…எல்லாம் first mark வாங்கறான் இல்ல அந்தத் திமிரு” – பாஸ்கர்.

மதன் மட்டும் அமைதியாய் இருந்தான்.

“ஏண்டா நீ மட்டும் சும்மா இருக்க நீயும் உன் பங்குக்கு ஏதாவது திட்டிடு” அவனைப் பார்த்து சொன்னேன்.

“மச்சி நீ சாரதாவ எந்தளவுக்கு லவ் பண்றனு எனக்குத் தெரியும்டா…அப்புறம் ஏண்டா மாட்டேன்னுட்ட?”

“நான் மட்டும் பிடிக்காமயாடா வேண்டாம்னு சொன்னேன்…அவ கேட்டப்பக் கூட நாளைக்கு சொல்றேன்னு சொல்லலாம்னு தான் நெனச்சேன்…ஆனா ஏதோ ஒரு பயத்துல பட்டுனு வேண்டாம்னு சொல்லிட்டேன்…அவங்க familyயும் நம்மள மாதிரி தான்டா…அவங்கப்பாக் கஷ்டப்பட்டுதான் படிக்க வச்சிட்டு இருக்கார்…எல்லா ட்யூஷன்லயும் அவ ஒரு installmentதான் fees கட்டியிருக்கா…அவள எஞ்சினியரிங் படிக்க வைக்கனும்னு அவங்கப்பாவுக்கு ஆசையாம்…அவளுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா…எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது சரிதான்னு இப்பத் தோணுது.”

“அதெல்லாம் சரி மச்சி…ஆனா இவ்ளோ நாளா ஆச காட்டிட்டு அவளே வந்து கேட்கும்போது மாட்டேன்னு சொன்னா அவளுக்கும் கஷ்டமாதான இருந்திருக்கும்”

“அவளுக்குக் கஷ்டமாதான் இருந்திருக்கும் எனக்கும் புரியுது….எனக்குப் பிடிச்சவ எங்கிட்ட வந்து propose பண்ணும்போது, ஆசையிருந்தும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்குறேனே…என்னோடக் கஷ்டம் ஏண்டா உனக்குப் புரியல??”

“சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

அவன் சொன்னதே நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவளை மறந்துவிட நினைத்தேன்.

ஆனால் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுதானே மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து தொலைகிறது.

அவளையே நினைத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு எண்ணம் வரும். ஒருவேளை அவளும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று.

அப்போதெல்லாம் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல எனக்கு உடல் பதறும்.

அவளைப் பற்றியே அதிகம் நினைத்துக்கொண்டிருந்ததால் படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது.ஏதோக் கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வின் போதுகூட தேர்வுக்கு முந்தைய நாளிலும் நான் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன். எல்லாத் தேர்வுகளையும் ஆர்வமே இல்லாமல்தான் எழுதினேன்.

தேர்வு முடிவு வந்தபோது நான் எதிர்பார்த்த மாதிரியே என் வீட்டிலும்,பள்ளியிலும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தேன்.

“என்னப்பா நீ centum வாங்குவேன்னு எதிர் பார்த்தா இப்படி மார்க் கொறஞ்சுடுச்சே” - மூன்று ட்யூஷனிலும் மாஸ்டர்கள் இதையே சொல்ல ஏண்டா அவர்களிடம் ரிசல்ட் சொல்லப் போனோம் என்று இருந்தது.

அப்புறம் வாங்கிய மார்க்குக்கு ஏதோ ஒரு காலேஜில் ஏதோ ஒரு க்ரூப் கிடைக்க அதில் சேர்ந்தேன்.

புது இடம். புது நண்பர்கள் என பழசை மறக்க ஆரம்பித்த சூழல் உருவாகியது.கல்லூரியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என பெண்களிடம் பேசுவதையேத் தவிர்த்தேன்.

என்னைப் போலவே இருந்தவர்கள் ஒன்று கூட ஒரு சிறிய நட்பு வட்டம் உருவானது. அருமையான நினைவுகளோடு அதிவேகமாய்க் கரைந்துபோனது ஐந்தாண்டுகள். கல்லூரியின் பெயரால் இறுதியாண்டு படிப்பு முடியுமுன்பே ஒரு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்து ஒரு வருடம் வேலையில் மூழ்க அவளைப் பற்றி நினைப்பதுக் குறைந்தது. எப்போதாவது பழைய நண்பர்களிடம் தொலைபேசும்போது நினைவுபடுத்துவார்கள்.கொஞ்ச நேரம் மனம் பழைய நினைவில் மூழ்கினால் வேலை என்னை இழுக்கும். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் இப்படி மறந்துகொண்டிருக்க, மறுபடியும் ஊருக்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.

அண்ணன் திருமணத்திற்காக நான் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குப் போயிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் , திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜோஸப் மாஸ்டர் வீட்டுக்குப் போயிருந்தபோது மாஸ்டருடைய மனைவிதான் இருந்தார். மாஸ்டர் இன்னும் வராததால் என்னை மேலேக் காத்திருக்க சொல்லி சொல்ல, நான் மேலே ட்யூஷன் ரூமுக்குள் நுழையப் போனேன்.

அப்போது மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.

(நிறைவுப்பகுதி )

அழியாத அன்புடன், Praba

No comments: