Thursday, February 15, 2007

படர் மெலிந்து இரங்கல்


எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!


மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக்காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.



உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!
உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தானடா வருகிறது!


கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.

இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை. நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.



காதலும் நாணமும்
இரட்டைக் குழந்தைகளா?

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து.

துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன



கடலைக் கரையில் இருந்து வேடிக்கை பார்க்கும் சிறுவனைப் போல
காதலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
முழுவதுமாய் உள்ளிழுத்துக் கொண்டு சிரிக்கிறாய்.

காமக்கடல் மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.


இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

இன்பமான நட்பிலேயே துயரத்தி வரச்செய்ய வல்லவர், துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?


காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?

இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது.

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.



காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.



நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…

மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை.

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.



கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க
நகர மறுக்கிறது.
உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.

கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா.

பிரிந்து துன்புறுகின்ற இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.



என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல செல்ல முடியுமானால் என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.


அழியாத அன்புடன், Praba

No comments: