Saturday, February 17, 2007

இதயத்தின் எடை 50300 கிராம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அழியாத அன்புடன்,
Praba.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசே...கொலுசே... - 1


திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழியாத அன்புடன்,
Praba
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசே...கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசு அணியாத உன் கால்…
கவிதை சூடாத காதல் போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊடல் நேரங்களில்
என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!
கொலுசைக் கண்டு பிடித்தவளு/னுக்குக் கோவில் தான் கட்ட வேண்டும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பள்ளி விடுமுறையில்
எந்த இசைப்பயிற்சிக்கு போகலாம்?
என்று கேட்கும் என் தங்கையிடம்,
உன்னைப்போல கொலுசில்
இசைக்கக் கற்றுக்கொள்
என்று எப்படி சொல்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசு கறுத்துப் போகுமாம்.
உன் கொலுசு பொன்னிறமாகத்தான் மாறும்!
அணிந்திருக்கும் கால் அப்படி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளிக்கும்போது கொலுசைக் கழற்றிவைத்து விட்டுக் குளி!
நீ குளித்த நீர் பட்டு உன்னைவிட அழகாகிவிடப் போகிறது உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழியாத அன்புடன்,
Praba.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுகப் பிரசவம்!

"வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்"
-கேட்ட மருத்துவரிடம்,
வேண்டாமென மறுத்துவிட்டேன்!

பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி,

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து,

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு,
விழிகளைப் பிதுக்கி,
பல்லைக் கடித்து,
அடிவயிறு உப்பி,
கால்களை உதறி,
முக்கி முக்கி,
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை,
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து,
உடல் தளர்ந்து,
உள்ளமும் சோர்ந்து,

உள்ளே, செத்துப்
பிழைத்தேன், நான்!

வெளியே, சொன்னார்கள்:
"சுக"ப் பிரசவம் என்று!

"பூம்"

நான், ஆதாம் ஏவாள் காலத்து
பழைய ஜோக்குகளை
அள்ளி விட்டாலும்
அன்று புதிதாய்க் கேட்பது போல்
பகீரென சிரிக்கிறாய்…

வாக்கியங்களைத் திருப்பிப் போட்டு
நான் வார்த்தைகளில் கிறுக்கியதையெல்லாம்
கவிதையென
சொல்லி சொல்லி இரசிக்கிறாய்…

உனது Good Morning SMS இல்லாமல்
எனது நாட்கள் விடிந்ததுமில்லை…

உனது Good Night SMS இல்லாமல்
எனது இரவுகள் தொடங்கியதுமில்லை…

12 மணிவரை விழித்திருந்து
முதல் ஆளாய் எனது பிறந்த நாளுக்கு
வாழ்த்துச் சொல்கிறாய்…


உனது சின்ன சின்ன சந்தோஷங்களையும்
பகிர்ந்து கொள்ள
என் மனம் தேடுகிறாய்…

உனது எல்லா பாரங்களையும்
இறக்கி வைக்க
என் தோள் சாய்கிறாய்…

என்னை மறக்க வில்லையென உணர்த்த
இத்தனையும் செய்வதற்குப் பதிலாக
என்னிடம் வாங்கிய கடனைத்
திருப்பிக் கொடுத்து விடேன்டா நண்பா!

விட்டுப்போன ஒன்று!

நீ வைத்த ரோஜா செடி, முதல் பூ பூத்ததும்,
முதலில் என்னிடம் சொல்லித்தான் புன்னகைப் பூத்தாய்!

நான் வாங்கும் பரிசுகளெல்லாம் உன்னிடம் தான்
தங்களை முதலில் அறிமுகப் படுத்திக் கொள்கின்றன!

என் நகக்காயம் முதல் மனக்காயம் வரை
எல்லாவற்றுக்கும் மருந்தாகிறாய் நீ!

உன் தங்கையோடு நடக்கும் செல்லச்சண்டை முதல்
உன் நண்பனிடம் போட்ட கோபச்சண்டை வரை
எல்லாவற்றுக்கும் சாட்சியாகிறேன் நான்!

யார் மேல் கோபம் என்றாலும்
என்னிடம் தீர்த்துக் கொள்கிறாய் நீ!

உன் மேல் கோபம் வந்தாலும்
என்னையேக் கோபிக்கிறேன் நான்!

ஒவ்வொரு மாதமும் என் பிறந்த நாளன்று
என்னை வாழ்த்துகிறாய் நீ!

ஒவ்வொரு வாரமும் நீ பிறந்தக் கிழமையன்று
உன்னை வாழ்த்துகிறேன் நான்!

இப்படி மகிழ்ச்சி, சோகம், கோபம், வாழ்த்து என
எல்லாவற்றையும் பரிமாறிக்கொண்டோம்
"நம் காதலை"த் தவிர!
அழியாத அன்புடன், Praba

யார் முதலில்?

நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!


அழியாத அன்புடன், Praba

+2 காதல் - 1

பத்தாவது வரைக்கும் நன்றாகப் படித்துவிட்டு 12-வது வந்து உருப்படாமல் போனவர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த இரண்டு வருடத்துக்குள் “ஏதாவது ஒன்று” நடந்து அவர்களை அலைய விட்டிருக்கும். அப்படி 12-வது படிக்கும்போது எனக்கு நடந்த அந்த “ஏதாவது ஒன்று” தான் இது…

அது பதினொன்றாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு முடிந்து எல்லோரும் +2 க்கு ட்யூஷன் சேர ஆரம்பித்திருந்த நேரம்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்குப் படிக்க வேண்டுமே என்கிற அக்கறை ஒரு காரணமாக இருந்தாலும், ட்யூஷன் சேர்வதில் எல்லோரும் காட்டிய ஆர்வத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது. அதாவது 11-வது வரைக்கும் ஆண்கள் மட்டுமேப் படிக்கும் பள்ளியிலேயே படித்து(?) வளர்ந்தவர்களுக்கு ட்யூஷனிலாவது பெண்களைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது நியாயம்தானே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த மாஸ்டரிடம் பெண்கள் அதிகமாக ட்யூஷன் சேர்ந்தார்கள் என இதற்காக ஒரு சர்வே எடுத்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவன் மதன். அவனுடைய சர்வே முடிவுப்படி கெமிஸ்ட்ரிக்கு ஜோசப் சாரிடம் சேருவது என நாங்கள் எல்லோரும் ஏக மனதாக முடிவு செய்தோம்.
நாங்கள் என்றால் அதில் நான், மதன், செல்வா, வினோத், பாஸ்கர் ஆகிய பஞ்சப் பாண்டவர்களும் அடக்கம்.

அந்த வருடம் பொங்கல் அன்றைக்கு கெமிஸ்ட்ரி ட்யூஷனில் +2 வுக்கான முதல் க்ளாஸ் நடந்தது.
அப்போதே யார் யார் எந்த batch வரவேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தார் மாஸ்டர்.
அங்கு ட்யூஷன் நடக்கும் அறை ஒரே சமயத்தில் 30 பேர் மட்டுமே உட்காரக் கூடிய அளவில் சிறியதாக இருந்ததால் சில சமயம் இரண்டு, மூன்று பள்ளிகள் கலந்து வர வேன்டியிருக்கும். மாலை 5 மணி பேட்சில் எங்கள் பள்ளியின் 20 பேரையும் சாரதாப் (பெண்கள்!) பள்ளியின் 12 பேரையும் மாஸ்டர் வர சொன்னவுடன்,
எங்கள் பத்துக் கண்களிலும் 1000 வாட்ஸ் பவர்!.

“அப்பாடா…எங்கடா நம்மள அந்த TNPL convent கம்மனாட்டிகளோட சேத்துடுவாரோனு பயந்தேன்…மனுசன் நம்ம மனசறிஞ்சு batch பிரிச்சிருக்கான் டா…ஜோசப் வாழ்க” உற்சாகத்தில் மதன், மன்மதனாகிக் கொண்டிருந்தான்.

“நல்லவேளை தெரசா ஸ்கூல் புள்ளைகளோட சேர்த்திருந்தான்னா நம்ம கத கந்தல்டா…அவுளுக அலம்பலுக்கு நாம தாங்கமாட்டோம்…ஏதோ சாரதா ஸ்கூல் புள்ளைக நம்ம ரேஞ்சு… பார்ப்போம் ஏதாவது செட் ஆகுதான்னு” – சொல்லிக்கொண்டே அந்தப் பக்கம் நோட்டம் விட்டான் வினோத்.

“உனக்கு ஏண்டா எப்பவும் தெரசா ஸ்கூல் புள்ளைக மேல இவ்ளோ காண்டு..அவங்க என்னப் பண்ணாங்க உன்ன??” வினோத்தை வம்புக்கிழுத்தான் செல்வா.
“டேய் இங்கப் பாருங்கடா இவன் பேசறத “அவங்க”லாம்…எப்படா மரியாத கொடுத்துப் பேச ஆரம்பிச்ச?...மச்சி நீ எந்த ரூட்ல போறேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா…நீ நடத்து…” செல்வா தனது பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி பின்னாடி சுற்றுவதும் அவள் தெரசா ஸ்கூலில் படிக்கிறாள் என்றும் ஏற்கனவே எங்களிடம் சொல்லியிருக்கிறான் வினோத்.
“டேய் மச்சி தெரசா ஸ்கூல் co-ed. அந்தப் புள்ளைக எல்லாம் நம்மள மதிக்கக் கூட மாட்டாளுங்க…அவளுக வர்றதே மொபட்லதான்…உன்னோட சைக்கிளப் பாரு…அதுல பெல்லத் தவிர எல்லாமே சத்தம் போடும்…சாரதா ஸ்கூல்னா நம்மள மாதிரிக் கேசு..நமக்குத் தாவணியேப் போதும்டா..சுடிதாரெல்லாம் வேணாம்” – வினோத்.
சாரதா ஸ்கூலில் தாவணிதான் யூனிபார்ம். அதற்காகவே அந்த ஸ்கூல் வழியாகதான் நாங்கள் எங்கள் பள்ளிக்கு எப்போதும் போவோம்.

ஒருவழியாக எங்கள் சண்டையை முடித்துவிட்டு மாஸ்டரிடம் முதல் தவணை ட்யூஷன் ஃபீஸ் கொடுத்துவிட்டு எங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு விடைபெற்றோம்.

ட்யூஷன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மதனும், வினோத்தும் ஆளுக்கொருப் பெண்ணைப் பார்க்க(!) ஆரம்பித்திருந்தார்கள். பாஸ்கரும், செல்வாவும் படிப்பதற்காகவே அவதரித்த மாதிரி எப்போதும் பாடத்திலேயேக் குறியாய் இருந்தார்கள். நான் இரண்டிலும் சேராமல் ஏதோக் கடமைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
ட்யூஷன் ஆரம்பித்து ஒரு மாதம் கழிந்த பிறகுப் புதிதாய் இன்னொருத்தி வந்து சேர்ந்தாள்.
அவள் ஸ்கூலைப் போலவே அவள் பெயரும் சாரதா. பெயரைச் சொல்லும்போது M.சாரதா என்று இனிஷியலோடு அவள் சேர்த்து சொன்னதும் நான்கு பேரும் என்னையேப் பார்த்தார்கள்.மதன் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி என் கையில் திணித்தான் “M.S – M.S” படித்ததும் கிழித்து அவன் கையிலேயேத் திணித்து விட்டேன்.

இன்றைக்குமுழுவதும் இவர்கள் நான்கு பேரும் என்னையேதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் நான் அவளைப் பார்ப்பதை வேண்டுமென்றேத் தவிர்த்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் ஒருபக்கம் திரும்பி நோட்டை எடுத்த போது எதேச்சையாக அவள் முகத்தைப் பார்த்தேன். அவளை அழகி என்று சொல்லமுடியாது ஆனால் எந்தக் குறையுமில்லாத எளிமையான முகம். மாநிறம். நான்கு பேரும் என்னையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நான் பார்வையைத்திருப்பினேன்.கொஞ்ச நேரம்தான். ட்யூஷனில் தரையில்தான் உட்கார்ந்திருப்போம்.அவளுடைய ஜடை தரையில் ஒரு அரை அடிக்கு சுருண்டு கிடந்தது.எனக்கு அடுத்த துண்டு சீட்டு வந்தது “கூந்தல் நீளமா இருக்கா?” எனக்கு நீளமானக் கூந்தல் பிடிக்கும் என்று இவர்களிடம் உளறியது வம்பாகப் போனது.
ட்யூஷன் முடிந்து அவள் எழுந்தபோதுதான் கவனித்தேன். எல்லோரும் தாவணியில் ஒரு இடத்தில் மட்டும் “பின்” குத்தியிருக்க அவள் மட்டும் இரண்டு இடத்தில் குத்தியிருந்தாள்.

நான் நோட்டில் கிறுக்கினேன் :
“அவள் மனதை மூடிக்கொண்டு
என் மனதைத் திறந்து விட்டாள்”
நோட்டைப் பிடுங்கிய மதன் சிரித்துவிட்டுக் கத்தினான் “இங்கப் பாருங்கடா ஒரு கழுத , கவித எழுத ஆரம்பிச்சுடுச்சு”



(தொடரும்...)
பகுதி 2

அழியாத அன்புடன், Praba

ஓருக் குட்டிக்(காதல்)கதை!

அந்தப் பூங்காக் குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப் பட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கொளுத்தும் வெயிலிலும் கூட அது எப்போதும் காதலர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
சூரியன் தன் இருப்பைக் காட்ட ஆரம்பித்த அந்தக் காலை வேளையிலேயே அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அவளுடையத் தோள் மேல் தன் வலது கையைப் போட்டபடி அவனும், அவனுடைய இடுப்பைத் தன் இடது கையால் சுற்றியபடி அவளும்.

“அருள், இந்தப் பூங்காவுக்கு நாம இதுவரைக்கும் எத்தன தடவை வந்திருப்போம்?”
“இங்க இருக்கிற மரத்துக்கிட்ட தான் கேட்கனும், எனக்கென்னமோ நான் பிறந்ததுல இருந்தே இந்தப் பூங்காவுக்கு வந்துகிட்டு இருக்கிற மாதிரி தான் தோணுது”

ஒரு வகையில் அவன் சொல்வதும் உண்மைதான். அவன் வாழ்வில் இரண்டாவது முறைப் பிறந்தது இந்தப் பூங்காவில்தான்.
அப்போது இது குடும்பத்தோடு எல்லோரும் வரும் பூங்காவாய் இருந்தது.ஒரு நாள் தன்னுடையப் பூனைக்குட்டியோடு அவள் இந்தப் பூங்காவுக்கு வந்திருந்த போதுதான் முதன்முதலாய் அவளைப்பார்த்தான். அப்போதேப் பூனைக்குட்டியாய் மாறி விட ஆசைப்பட்டவன், இப்போது அவள் பின்னே ஒரு பூனைக்குட்டியாகவே மாறியிருந்தான்.

“அரசி, இந்த மரத்துல இதுக்கு முன்ன நீ பூ பூத்துப் பார்த்திருக்க?”
“அது வருஷத்துல ஒரு தடவை மட்டும் தான் பூக்கும், போன வருஷம் பூத்திருந்தத நான் பார்த்தேன்”

“நான் எப்படிப் பார்க்காமப் போனேன்?”
“வெளியில வரும்போதாவது சுத்திலும் என்ன இருக்குன்னுப் பார்க்கனும், எப்பவும் என்ன மட்டுமேப் பார்த்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்”

“இப்ப மரத்த விட்டுட்டு, உன்னப் பார்க்கனும்..அதான? இரு.. இரு..இந்தப் பூவ மட்டும் பறிச்சுட்டு வந்துட்றேன்..”
“அது அவ்ளோ உயரத்துல இருக்கே, வேண்டாம் விடுங்க…”

“கொஞ்சம் இரு..அந்தப் பூ அப்ப இருந்து ஏக்கத்தோட உன்னையேப் பார்த்துட்டு இருக்கு, அதப் பறிச்சு உங்கிட்டக் கொடுக்கலேன்னா என்னதானத் திட்டும்”, சொல்லிக்கொண்டே ஒரு பெஞ்ச் மீது ஏறி கொஞ்சம் எக்கிப் பறித்தான் அந்தப் பூவை.
அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள், கையிலேயே வைத்துக் கொண்டாள்.
“அதப் போய் அப்படி எக்கிப் பறிக்கிறீங்களே, கீழ விழுந்தா என்னாகறது?”

“அந்தப் பூ விழுந்திருந்தா, வேறப் பூ பறிச்சுத் தந்திருப்பேன்”
“ம்ஹூம்…உங்களத் திருத்தவே முடியாது!” என்று சிணுங்கியவள் பூவைச் சூடிக்கொள்ளத் திரும்பி நின்றாள்.
அவன் கையால் பூவைச் சூடிக்கொண்ட பின் அவர்கள் வழக்கமாய் அமரும் அந்த மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

“இன்னைக்கு என்னங்கக் கூட்டமே இல்ல?”
“எல்லாருமே நம்மள மாதிரிக் காதலிக்கிறது மட்டுமே வேலையா இருப்பாங்களா என்ன?”

“ம்ம்..அதுவும் சரிதான்”
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் காதலில் பிதற்ற ஆரம்பித்தான்.

“எப்பவும் கூட்டத்துக்கு நடுவிலப் பார்த்தாலே நீ தனியா அழகாத் தெரிவ; இன்னைக்கு பூங்காவில உன்னமட்டும் தனியாப் பார்க்க நீ எவ்ளோ அழகா இருக்கத் தெரியுமா?”
“அழகா இல்லாமப் பின்ன எப்படி இருப்பேனாம்? ஒரு நாளைக்கு ஒரு தடவை சொன்னாப் பரவால்ல! காலைலத் தூங்கி எழுந்ததுல இருந்து ராத்திரித் தூங்கப் போற வரைக்கும் ஆயிரத்தெட்டு தடவ “நீ அழகா இருக்கடி”னு சொல்லி சொல்லி எனக்கே மனசுல நான் அழகினு பதிஞ்சு போச்சு, நாம நினைக்கிற மாதிரிதான நாம இருப்போம்..அதான் நான் எப்பவும் அழகா இருக்கேன்”

அவள் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தவன், “நீ அழகா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்னா ஒவ்வொரு பிறந்த நாள் முடிஞ்சவுடனே உனக்கு மட்டும் ஒரு வயசுக் கம்மியாயிடுதே அதுக்கென்னக் காரணமாம்??”
“ஆமா, ஒரு தடவ “நீ அழகா இருக்கடி”னு சொன்னா ஒன்பது தடவ “நான் உன்னக் காதலிக்கிறேன்”னு சொல்றீங்க…தினமும் சொல்ற உங்களுக்கும் சலிக்கல…தினமும் கேட்கிற எனக்கும் சலிக்கல..இப்படி தினம் தினம் காதலிக்கப் படறவங்களுக்கு எப்படி வயசுக் கூடுமாம்??”

“எனக்கு மட்டும் கூடுது!”
“உங்க அளவுக்கு என்னாலக் காதலிக்க முடியல இல்ல! அதான் நீங்கக் காதலிக்கிறத விடக் காதலிக்கப் படறது கம்மி! அதனாலதான் உங்களுக்கு வயசுக் கூடிக்கிட்டேப் போகுது!”

“அரசி! நீ எப்போ இந்த மாதிரியெல்லாம் பேச ஆரம்பிச்ச?” ஆச்சரியமாய்க் கேட்டான்.
வழக்கமாய் அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவன் தான் இப்படி காதலில் உருகிக் கொண்டிருப்பான்.
நேரம் கரைந்து, வெயில் கொஞ்சம் அதிகமாகவே இருவரும் பூங்காவை விட்டு வெளியே நடந்து வந்தார்கள்.

அவள்,எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் கடையைக் காட்டிக் கேட்டாள், “அருள், ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ப்ளீஸ்”
“உன்ன ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல…அப்புறம் குண்டாயிட்டீன்னா உன்ன வீட்ல எல்லாரும் ஜோதிகானு கிண்டல் பண்ணப் போறாங்க”

ஒவ்வொரு முறை அவள் ஐஸ்க்ரீம் கேட்கும்போதும் அவன் முதலில் மறுப்பதும், பின் அவளுடையக் கெஞ்சல், சிணுங்கலில் அவன் ஐஸ்க்ரீமாய் உருகி, ஒன்றை வாங்கித் தருவதும் வழக்கமாய் நடப்பதுதான். ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒருக் குழந்தையைப் போல் அவள் ஐஸ்க்ரீமை ருசிப்பதை, ரசித்துக் கொண்டே வந்தான்.

“ம்ம்…இப்படிதான் ஐஸ்கிரீம சாப்பிடறதா..பாரு உதட்டுக்கு மேல எல்லாம்..”, சொல்லிக்கொண்டே அவள் உதட்டருகே கையைக் கொண்டுபோனான்.
“அருள்! இது பொது இடம்! ஞாபகம் இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு உதட்டை அவளேத் துடைத்துக் கொண்டாள்.

“அடிப் பாவி! உன்னோட உதட்டப் போய் பொது இடம்னு சொல்றியே! அது நம்மோடத் தனி இடம்டி”
“ம்ம்..என்னோடத் தனி இடம்டா!”

பேசிக்கொண்டே அந்தத் துணிக்கடைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் காலையில் கிளம்பியதே அடுத்த வாரம் அவர்களுக்கு நடக்க இருக்கும் கல்யாணத்திற்கு துணியெடுக்கத்தான். ஆனால் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அந்தப் பூங்காவுக்குள் நுழையாமல் அவர்களால் இருக்க முடியாது.அதனால்தான் காலையில் முதலில் பூங்காவில் கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப் பிறகுக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
இருவருக்குமேப் பெற்றோர் இல்லாததால்தான் அவர்கள் மட்டும் தனியே வந்திருந்தனர்.

கடைக்குள் நுழைந்ததும், அவளே ஆரம்பித்தாள்:
“எப்பவும் சொல்ற மாதிரி புடவை வேண்டாம்னு சொல்லிடாதீங்க, கல்யாணத்தன்னைக்காவது நான் புடவையக் கட்டிக்கிறேன்”
“என்னை…”
“உங்களையுந்தான்…”, சிரித்தாள்.
“சரி என்ன மாதிரிப் புடவை பார்க்கலாம்”
“பட்டெல்லாம் வேண்டாம், சிம்பிளா ஒரு கைத்தறிப் புடவை, தலைல ஒரே ஒரு ரோஸ், கழுத்துல ஒரு சின்ன செயின் இது மட்டுதான் என்னோடக் கல்யாண costume! So கைத்தறிப் புடவையேப் பார்க்கலாம்”
“என்னக் கலர்ல பார்க்கலாம்?”
“உங்களுக்குப் பிடிச்ச பச்சை”
“ம்ஹூம்… உனக்குப் பிடிச்ச ப்ளூ”
இருவரும் மாறி மாறி சண்டை போட்டு முடிவில் அவள் சொன்னாள்,
“சரி எனக்குப் புடவை பிடிக்கும், அத உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கலர்ல எடுத்துடுவோம்..உங்களுக்கு சுடிதார் பிடிக்கும், ஒரு சுடிதார் எனக்குப் பிடிச்ச ப்ளூ கலர்ல எடுத்துடுவோம்! சரியா??”
“ம்ம்ம்…எக்ஸ்ட்ராவா ஒரு சுடிதார் வேணும், அதுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா? சரி சரி ரெண்டுமே எடுத்துடுவோம்!”
அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு, சுடிதார் பகுதிக்கு வந்தார்கள்.
“அருள், இந்த மெட்டிரியல் எப்படி இருக்குன்னுப் பாருங்க?”
“இதுக்கென்னத் துப்பட்டாக் கிடையாதா?”
“இல்ல இந்த மாதிரி தச்சா துப்பட்டாப் போடாம இருக்கிறதுதான் இப்ப ஃபேஷன்”
“அப்போ plain-material வேண்டாம் embroidery பண்ணது எடுக்கலாம்…இந்தா இது எப்படி இருக்குன்னுப் பாரு”
“ம்ம்..பரவால்லியே உங்களுக்குக் கூடக் கொஞ்சம் dressing sense இருக்கு!”
“என்னோட dressing sense-ச வச்சி உனக்கு எது நல்லா இருக்குனுதான் சொல்லத் தெரியும்; எனக்கு நீயே பார்த்து ஒன்ன select பண்ணு”
அவனுக்கு அவளே ஓர் ஆடையைத் தேர்ந்தெடுத்தாள், அவளுக்குப் பிடித்த நிறத்தில்.
எல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் வாசலிலேயே அவர்களுக்கு வரவேற்புக் காத்திருந்தது.

“ஏன் தாத்தா! Dress வாங்கப் போறோம்னு காலையிலேயேக் கிளம்பிப் போய்ட்டு இப்பதான் வர்றீங்க…இவ்ளோ நேரம் எங்கப் போய் லவ் பண்ணிட்டு இருந்தீங்க?”
கேட்டு விட்டு உள்ளே ஓடும் பேத்தியைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள், அடுத்த வாரம் அறுபதாம் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் அருளும், அரசியும்!


அழியாத அன்புடன், Praba